ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வரும் 70 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்க வாய்ப்பு கிடையாது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் எச்சரித்திருக்கிறார்.
“சம்பந்தப்பட்ட மக்கள் அகதிகள் கிடையாது என்றால் அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு இல்லை. அவர்கள் திரும்பி தங்கள் சொந்த நாட்டுக்கு செல்வதற்கான நாம் வழங்க வேண்டும்,” என அண்மையில் உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், சரியான காரணமின்றி விசா கோருபவர்களுக்கு அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
எந்த காரணமுமின்றி சாதாரணமாக வந்து நிரந்தரமாக வசிப்பதற்கான நாடு அல்ல ‘ஆஸ்திரேலியா’ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
"ஒரு நாடாக நாம் தீவிரமாகத் தவிர்த்த ஒன்றை நாம் எதிர்கொண்டுள்ளோம்,” எனக் கூறியுள்ள உள்துறை அமைச்சர் கிளாரி’நீல் இந்த ஆவணங்களற்ற தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஆளாக கூடியவர்கள் என்கிறார்.
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீலின் கூற்றுப்படி, கடந்த மே மாதம் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த போது பரிசீலிக்கப்படாத நிலையில் சுமார் 10 லட்சம் விசாக்கள் இருந்ததை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த நிலைக்கு கடந்த தாராளவாத தேசிய கூட்டணி ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக இருந்த பீட்டர் டட்டனே முக்கிய காரணம் என தற்போதைய உள்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
“பீட்டர் டட்டன் குடிவரவுத் துறை அமைச்சராக இருந்த போது, எல்லைகளை பாதுகாப்பதில் தான் எவ்வளவு கடுமையானவர் என்பதை நாடு முழுவதும் சொல்லி வந்தார். ஆனால், அவரது பார்வையின் கீழேயே அனைத்தும் நடந்திருக்கிறது. இது ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய ஆட்கடத்தல் மோசடியாக விவரிக்கப்படுகிறது,” என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் குறிப்பிட்டிருக்கிறார்.