இமயமலைப் பகுதியிலுள்ள பெரும்பாலான பனிப்பாறைகள் உருகி வருவதாக நாடாளுமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பனிப்பாறைகள் ,ஏரிகள் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றைக் கண்காணிப்பது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தின் போதே மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த நிகழ்வு இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்குப்பதுடன் இமயமலை ஆற்றின் ஓட்டத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இமயமலைப் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விகிதங்களில் உருகுவதோடு அதன் இடத்தில் இருந்து பின்வாங்கி வருகின்றன என்றும் அறிக்கை கூறுகின்றது.
பனிப்பாறைகள் நதி அமைப்பை பாதிக்கும் மற்றும் பனிப்பாறை ஏரிகளின் வெடிப்பு, பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் தூண்டப்படும் வெள்ளம் போன்ற பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைவாழ் மக்கள் மற்றும் மலையடிவார மக்களின் வாழ்வாதாரத்தையும் பத்துக்கும் என்பதுடன் பனிப்பாறை தொடர்பான தரவுகளுக்கு அண்டை நாடுகளுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் தரவுகளைப் பகிர்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் இமயமலைப் பகுதியில் உள்ள இந்தியாவின் அண்டை நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாறுதல் போன்றவற்றால் இமயமலையின் குளிர் பகல் மற்றும் குளிர் இரவுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் முழுவதுமுள்ள 16 இடங்களில் சூடான நாட்களின் சதவீத எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குளிர் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது