யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குகூட ஒரு சேமக்காலை இல்லாத நிலையிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாக யாழ் மாவட்ட பெண்கள் அமைப்பின் தலைவி ரவீந்திரன் பிரியா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் ஓரிரு நாட்களுக்கே போதுமானதாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரைகாலமும் 34 பேருக்கு மட்டுமே கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது மேலும் 80 பேருக்கு கடலட்டைப்பண்ணைகளை அமைப்பதற்கான அனுமதியினை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளதாக ரவீந்திரன் பிரியா சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மயிலிட்டி பகுதியில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படாததன் காரணமாக மக்கள் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.
குறிப்பாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான மயானம், பாடசாலை மற்றும் சமய வழிபட்டுத் தலங்கள் என்பவையும் இதனுள் அடங்குவதாக ரவீந்திரன் பிரியா தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி வீதியானது 2 கிலோமீட்டர் அளவிற்கு சீராக புனரமைப்பு செய்யப்படாமல் பள்ளமும் திட்டியுமாக காணப்படுவதனால் அந்த வீதியூடாக பயணிக்கின்ற பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைவரும் தினமும் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
மேலும் சீரான மீள்குடியேற்றங்கள் இன்மை மற்றும் கடலட்டை பண்னை பிரச்சினை தொடர்பிலும் அரசியல்வாதிகள் சரியான தீர்வினை மேற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகளானது சரியான முறையில் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய முறையில் அது கிடைக்கப்பெறும் வகையில் அரச உத்தியோகத்தர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.