மக்கள் ஆணை இல்லாத ரணில் தலைமையிலான அரசாங்க்கத்திடம் நிதியுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயங்குவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச நாடுகள் எதிர்பார்ப்பது இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றே. எனவே, அதனை தேர்தல் மூலமாகவே உருவாக்க முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி தாமதமடைய நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் இன்மையே காரணமாகும்.
தற்பொழுது காணப்படும் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை முன்னெடுக்கின்றபோது எதிர்காலத்தில் தேர்தலொன்று நடத்தப்படுமாயின், அதில் தற்போதுள்ள அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும் என்பது அவர்களுக்கு தெரியும்.
அதன் பின்னர் புதிதாக ஆட்சிக்கு வரும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துமா என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. அதன் காரணமாகவே நிதியுதவி தாமதமாகிறது எனவும் தெரிவித்தார்.