தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. அந்த தேர்தலை நடாத்துவதற்கு முக்கியமான கருவி தேர்தல் ஆணைக்குழு. குறித்த ஆணைக்குழு பூரணப்படுத்தப்படாமலுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் அமீர் பாயீஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தினூடாக நமக்கு வழங்கப்பட்டுள்ளதைச் சரியாகச் செய்ய வேண்டும். தேர்தல் ஆணைக்குழு கடந்த காலங்களில் பல தேர்தல்களை முறையாக நடாத்தி முடித்திருந்தாலும் இன்று அறிவிக்கப்பட்டு நடாத்தப்படாமலுள்ள உள்ளூராட்சி தேர்தலை நடாத்த இயலாமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது ஜனநாயகத்திற்குள்ள சவாலாகக் காணப்படினும் மக்கள் ஜனநாயகத்தை தங்களிடமிருந்து பிரித்தெடுக்கமுடியாத உரிமையாக எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள் என்பதை வைத்துத் தான் நடவடிக்கைகள் காணப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு அடக்குமுறைகளுக்கு மத்தியில் ஜனநாயக செயற்பாட்டினூடாக மக்கள் நாட்டில் சில மாற்றங்களை கொண்டுவந்தனர். அந்த ஜனநாயகத்தை உயிர்ப்பூட்டத்துடன் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு.
தேர்தலை நடத்தாத நாட்டுக்கு ஏன் தேர்தல்கள் ஆணைக்குழு எனவும் தேர்தல்கள் கட்டிடமெனவும் மக்கள் மத்தியில் இன்றைய நிலையில் நியாயமான கேள்வியை வினாவலாம். மக்கள் கஷ்டமான நிலையிலும் பல சவால்களுக்கு மத்தியில் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளனர் என்ற நம்பிக்கையை உணர்ந்தவர்களாக எங்கள் பணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
ஜனநாயகமும் சட்டவாட்சியும் இல்லாத எந்தவொரு நாடும் அதளபாதாளத்தை நோக்கிச் செல்லும். கடந்த காலங்களில் மக்களின் வேண்டுதல்களுக்கேற்ப திணைக்களமாக இருந்த தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது சுயாதீன ஆணைக்குழுவாக மாற்றமடைந்துள்ளது.
சுயாதீனமாகக் காணப்படும் ஆணைக்குழுக்களை நிறைவேற்று அதிகாரமுள்ளவர்கள் அடக்க முயன்றாலும் அது சட்டத்தினூடாகப் பாதுகாப்பதற்கு வலுப்படுத்தும் செயற்பாடு எங்கள் கைகளிலே உள்ளது.
எனவே இப் புதிய கட்டடமானது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அடையாளமாவும் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாக்கும் அடையாளமாகவும் மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்