யாழ் மாவட்டத்தில் உள்ள 5 வலயங்களையும் தவிர ஏனைய மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடம் நிரப்பப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வட மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி,முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனேகமான பாடசாலைகளில் நிரந்தர அதிபர் இன்றி பாடசாலைகள் நெருக்கடி நிலைமைகள் தள்ளப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஆசிரியர் நியமனத்திலும் அதிபர் நியமனத்திலும் வெளி மாவட்டங்கள் செல்லாத சுமார் 44 அதிபர்கள் யாழ். மாவட்டத்தில் இடமாற்றம் இன்றி தங்கியுள்ளனர்.
அவர்களுக்கான இடமாற்றத்தை வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அரசியல் தலையீடுகள் காரணமாக குறித்த இடமாற்றம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருந்து 22 அதிபர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட போதும் அவர்களும் கடமைக்கு செல்லவில்லை.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிபர்கள் அற்ற பாடசாலைகளுக்கு விரைவாக அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.