யாழ்ப்பாண குடாநாட்டில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றால், பாரிய மரங்கள் பல சாய்ந்து வீழ்ந்துள்ளதோடு 3 வீடுகளும் சேதமடைந்துள்ளன.அத்துடன் பல மரங்கள் வோரோடு சாய்ந்துள்ளன.
ஊர்காவற்றுறை மற்றும் காரைநகரில் பனை மரங்கள் வீடுகளின் மீது வீழ்ந்தமையினால் இரு வீடுகள் சேதமடைந்தன.
இதேபோன்று மருதங்கேணி வத்திராயன் பகுதியில் பனை மரம் முறிந்து வீழ்ந்ததால், வீடுகளிற்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப்பரப்பிற்குள் பலாலி வீதி, சுண்டுக்குழி, கயின்ரல், காலி அபூபக்கர் வீதி ஆகிய இடங்களில் பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன.
இவ்வாறு வீதியில் வீழ்ந்த மரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பணியாளர்களால் அகற்றப்படுகின்றது.
மேலும் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் வீதியில் சூறாவளியால் இரு வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
அவ்வீதியில் பனை , தென்னை மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை மூன்று மணியிலிருந்து மின்சார விநியோகம் பாதிப்படைந்துள்ளபோதிலும் தற்போது வரை மின்சார சபையினர் அங்கு வருகைதரவில்லையென பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.