யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கு சுகாதார அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு நிலவும் நிலையில் மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கமுடியாதுள்ளமையை அறிய முடியாதவராக சுகாதார அமைச்சர் காணப்படுகின்றார்.
கடந்த 2 ம் திகதி யாழ்ப்பாண வைத்தியசாலையில் சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் பணியாளர்களின் தவறினால் 8வயதுடைய சாண்டில்யன் வைசாளினி எனும் சிறுமி கையை இழந்துள்ளார்.
குறிப்பாக அவர் காய்ச்சல் காரணமாக 26ம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறுதலாக ஏற்றப்பட்ட மருந்து காரணமாக அவரது கை சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. குறித்த சிறுமியின் கையை அகற்றியமையானது ஏற்றுக்கொள்ள முடியாது.
வைத்தியசாலையில் வைத்தியர்கள் சாதனை புரிந்தால் பெரிய விடயமாகக் கருதும் நீங்கள் அங்கு நடைபெறும் அசம்பாவிதத்திற்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
எனவே இவ் விடயம் தொடர்பாக நீங்கள் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.