ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற
உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.
இதற்கமைய
கல்முனைத்தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம். எஸ். எம்
அப்துர் ரஸ்ஸாக் தலைமையில் ஸாஹிபு வீதியிலுள்ள கட்சியின் கல்முனைத் தொகுதி
காரியாலயத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் திங்கட்கிழமை(12) மாலை
கலந்து கொண்டு கட்சியின் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாக ஆதரவாளர்களுடன்
கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மாவட்டத்தின்
அமைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து
கொண்டனர்.
இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் கட்சியின்
உறுப்புரிமை அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அங்கு கருத்துக்களை தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க,
நாட்டில்
தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையானது தற்காலிகமானது. பொருட்களை
இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தல் மற்றும் கடன்களை திருப்பிச்
செலுத்துவதை நிறுத்தி வைத்திருப்பதால் தான் இந்த தற்காலிக ஸ்திரத்தன்மை
காணப்படுகிறது எனவே நாட்டில் தற்போதுள்ள ஸ்திரத்தன்மை நிலையானது என நான்
நம்பவில்லை .மீண்டும் கடன்களை செலுத்த தொடங்குவதுடன் இறக்குமதி
கட்டுப்பாடுகளையும் நீக்கினால் இலங்கை ரூபாய் மீண்டும் வலுவிழக்கும் .
அத்துடன்
பொதுத் தேர்தலுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்யும்
நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதை ஊடகங்களில் ஊடாக அறிந்து கொண்டேன்.
அது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும் .மேலும் எதிர்காலத்தில் எந்தவொரு
காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம்
தீர்மானித்தால் அதற்கும் தமது கட்சி தயாராக இருக்கின்றோம்.
இது
தவிர ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் தற்போது பேசப்படுகின்றது.ஆனால் அத்தகைய
சட்டமூலங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.எனினும் சில
விடயங்களில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த சுய தணிக்கையை நிறுவலாம் என அவர்
கூறினார்.