யாழ். வலயத்துக்கு உட்பட்ட அரியாலை பூம்புகார்
பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பெயரில்
மாணவிக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலை இயங்க முடியாத
சூழ்நிலை உருவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த
பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு அதே
பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பெயரை கூறி தொலைபேசி அழைப்பு
விடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த புதன்கிழமை அப்பகுதி மக்கள் பாடசாலையை
முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்ட
மக்கள் குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் பெயரை
கூறி அவரே மாணவிக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததாகவும் அவரை வெளியே
அனுப்புமாறு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
நிலைமையை
அறிந்த ஆசிரியர் பின் கதவால் பாடசாலையை விட்டு வெளியேறு பாதுகாப்பான
இடத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிசார்
குறித்த ஆசிரியர் மாணவியுடன் உரையாடி தொலைபேசி இலக்கத்தை ஆய்வு செய்தபோது
குறித்த தொலைபேசி இலக்கமானது சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பெயரில் பதிவு
செய்யப்படவில்லை.
எனினும்
ஊர் மக்கள் தொலைபேசி உரையாடல் குறித்து ஆசிரியருடையது தான் என தர்க்கம்
புரிந்து வரும் நிலையில் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில்
பாடசாலையை முற்றுகையிட்ட மக்கள் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில்
செய்யப்பட்டதாக ஆசிரியர் தரப்பால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஒன்று பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் பயத்தின் காரணமாக பாடசாலை
செல்லாது வலயத்திலும் அயல் பாடசாலை ஒன்றிலும் தமது வரவுக்
கையெழுத்துக்களை வைத்துள்ளனர்.
தமது
பாதுகாப்பை உறுதிப்படுத்தாத வரைக்கும் தம்மால் குறித்த பாடசாலையில்
கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என கல்வி உயர் அதிகாரிகளுக்கு
குறித்த பாடசாலை ஆசிரியர்களால் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த
விடயம் படமாக ஆளுநரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இவ்வாறான
நிலையில் குறித்த பாடசாலை நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்களுக்கும்
சுமுகமான உறவு ஏற்படாவிட்டால் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும்
ஆசிரியர்களை முற்றாக மாற்றி புதிய ஆசிரியர்களை நியமிப்பது எனவும் அல்லது
குறித்த பாடசாலையை அயல் பாடசாலையுடன் இணைப்பது தொடர்பில் மாகாண கல்வி
உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.