பழ.நெடுமாறன் அவர்கள் கூறிய வார்த்தைகள் 2024, 2025
காலத்தில் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும். கடவுள் இருக்கின்றாரா? இல்லையா
என்ற கேள்விக்கு எத்தகைய பதில் கிடைக்குமோ அதே பதில் தான் தலைவரின்
விடயத்திலும் இருக்கின்றது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்
புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.
இன்றைய தினம் காரைதீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தி அண்மைக் காலமாக பேசுபொருளாக இருக்கின்றது.
அந்தவகையில்
நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட கருத்து உண்மையிலேயே அவருக்கு ஏதேனும்
தகவல்கள் வந்து சொல்லியிருக்கலாம். ஏனெனில் நாங்கள் போராட்டத்திற்கு
வருவதற்கு முன்பிருந்தே அவர்கள் எமது போராட்டத்துடனும், தலைவருடனும்
நெருங்கிய தொடர்புடனும் இருந்து செயற்பட்டவர். 40 வருடத்திற்கு மேலாக எமது
போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருப்பவர் என அறிந்துள்ளோம்.
அவ்வாறான
ஒருவர் இவ்வாறான செய்திகளை விட்டிருப்பதென்பது தமிழ் மக்கள் மத்தியில்
மாத்திரமில்லாமல் ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்கும் விடயமாக இருக்கின்றது.
இன்று
தலைவர் தொடர்பான விடயத்தில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்ற
கேள்விக்கு எத்தகைய பதில் கிடைக்குமோ அதே பதில் தான் தலைவரின் விடயத்திலும்
இருக்கின்றது. அனைத்து மதங்களும் கடவுள் இருக்கின்றார் என்ற ஏதோவொரு
நம்பிக்கையில் தான் செயற்படுகின்றன. அதேபோலவே எங்கள் தேசியத் தலைவர்
ஒட்டுமொத்த தமிழ் மக்கள் போராளிகளின் ஊடாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
எங்களது
தேசியத் தலைவர் இல்லை, இறந்துவிட்டார் என்று சொல்லுவதற்கு எவருக்கும்
அருகதை இல்லை. ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு புனிதர்களின் வரலாறு இருப்பது
போன்று எமது இனத்திற்கு எமது தலைவரின் வரலாறு இருக்கின்றது.
இன்று
நடக்கின்ற விடயங்கள் எல்லாம் எமது தலைவர்களால் தீர்க்க தரிசனமாக
1990களிலேயே சொல்லப்பட்டவை. எமது போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஒரு
குறிப்பிட்ட காலம் தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற சர்ச்சை வரும்
அக்காலத்தின் பின் எமது தலைவரின் பெயர் ஏதொவொரு வகையில் வெளிவரும் அந்த
சமயத்தில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் வடகிழக்கு இணைந்த தீர்வொன்று
தலைவரூடாகப் பெற்றுக் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
எங்கள்
தலைவருக்கு என்றுமே சாவில்லை. அவர் என்றும் எம் மக்கள் மனதில் இருந்து
அழிக்கப்பட முடியாதவர். தற்போதைய நிலைமையில் அடுத்தது என்ன என்ற விடயத்தை
உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது.
தலைவர்
இல்லை என்று அரசாங்கம் சொல்லட்டும். இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
இல்லை, கைது செய்யப்பட்டவர்கள் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களில்
சிலர் தற்போது வந்தார்கள், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டும்
இருக்கின்றார்கள்.
ஒரு
விடுதலையை நோக்கிப் போராடிய இயக்கம். போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று
பதின்மூன்று வருடங்களாக எந்தவித ஆயுதமேந்திய போராட்டங்களையும் மேற்கொள்ளாத
நிலையில் எமது இயக்கத்தின் போராட்டத்தை சர்வதேசம், ஐக்கிய நாடுகள் சபை
அங்கீகரிக்க வேண்டும். அந்த இயக்கம் எதற்காகப் போராடியதோ அந்த உரிமையைக்
கொடுக்க வேண்டும் அந்த நியதி இருக்கின்றது.
போராட்டம்
மௌனிக்கப்பட்ட பின்னர் இன்றுவரை விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில்
இயங்கவில்லை என்ற ரீதியில் நாங்கள் நேர்மையானவர்கள், நேர்த்தியானவர்கள்
என்ற அடைப்படையைப் புரிந்து கொண்டு எமது தேசியத் தலைவரின் கோட்பாட்டின்
கீழ் ஜனநாயக ரீதியில் அனைத்து நாடுகளும் இணைந்து தலைவரின் வழிநடத்தலில்
வடகிழக்கு இணைந்த தாயகத்தை அவரின் கைகளில் வழங்கும் என நாங்கள்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
பழ.நெடுமாறன்
அவர்கள் கூறிய வார்த்தைகள் 2024, 2025 காலத்தில் ஒரு மாற்றத்தைத்
தோற்றுவிக்கும். தலைவர் மீண்டும் மக்கள் மத்தியில் வருவாராக இருந்தால் அது
நிச்சயமாக ஆயுத ரீதியான நடைமுறையாக இருக்காது. ஜனநாயக ரீதியில் எமது
மக்களின் இனவிடுதலைக்கான முன்னெடுப்புகளுடன் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடனேயே
அவர் தோற்றம் பெறுவார் என்று தெரிவித்தார்.