அதிபர் ஆசிரியர்கள் மீது அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து
விடப்படும் வன்முறைகளை கண்டித்தும் ஆசிரியர்களின் உரிமைகளை அடக்குமுறையால்
பறிக்க வேண்டாமென வலியுறுத்தியும் யாழ்ப்பாண பாடசாலைகள் முன்பாக இன்று(27)
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர்,
ஆசிரியர்களின் உரிமையை வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட
போராட்டத்தின் போது அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைக்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் இப்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய
பாடசாலைகள் முடிவடைந்த பின்னர் யாழிலுள்ள பாடசாலைகள் முன்பாக அதிபர்,
ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை
முன்னெடுத்திருந்தனர்.
இதன்
போது ரணில் - ராஜபக்ஷ அரசினால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை
கண்டிக்கிறோம், ஆசிரியர் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்காதே, வாக்குறுதி
கொடுத்த சம்பள உயர்வை வழங்கு, மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்காதே
உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.