தேர்தலை நாடாத்துவதற்கு நிதி பற்றாக்குறையினை காரணம் காட்டி ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தேர்தலை பிற்போட சாக்கு போக்கு கூறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவின் ஊடக பேச்சாளர் உமாசந்திர பிரகாஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் ரத்மனாலை பிரதேசத்தில் அமைந்துள்ள முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவுகளை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
நாட்டில் பொருளாதார ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த கால கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க சரியானதொரு தலைவராக செயற்படுவார் என்று காத்திருந்த பலருக்கு ஏமாற்றம் மிஞ்சியிருக்கின்றது.
பொதுஜன பெரமுனவை முதன் முதலாக தாங்கள் தேர்தலை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்தார்கள்.
ஆனால், இந்த தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சியினரும் தயக்கம் காட்டுகின்றார்கள். காரணம் மக்களிடம் பணமில்லை, நாட்டில் பணமில்லை தேர்தலிற்கு இந்த பணத்தை செலவழிக்க போவதாக சாக்கு போக்கு கூறுகின்றனர்.
மக்களுடைய முதலாவது ஜனநாயக உரிமை வாக்களிப்பதில் இருக்கிறது. வாக்களிப்பதனை கூட பிற்போடுவதால் அவர்களுடைய அத்தனை உரிமைகளும் தள்ளி போவதாகவே நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்தார்.