கடந்த 2016ம் ஆண்டு இதேநாளில்(20) பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலை கழக மாணவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(20) காலை நடைபெற்றன.
யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உருவ படங்களுக்கு மலர் தூபி, சுடரேற்றி பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சம்பவத்தின் பின்னணி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து அவர்கள் மீது காவற்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.