யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) இரவு காட்டு யானையின் தாக்குதலில் கல்முனையில் இருந்து நிந்தவூர் அல்லிமூலை வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இறக்காமம் பகுதி 9ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் விபானி என்ற 3பிள்ளைகளின் தாயார் என்பதுடன் அண்மையில் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு ஒன்றிற்கு செல்லவிருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் எடுத்து செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரனின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரின் பிரசன்னத்துடன் மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.