சாவச்சேரி பேரூந்து நிலையத்திலுள்ள நன்நீர் கிணற்றினை சுத்திகரித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
குறித்த கிணற்றை சுத்திகரித்து அப்பகுதி மக்களுக்கு குடிநீரை வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு சென்று அது குறித்த நிலைமைகளை அமைச்சர் ஆராய்ந்திருந்தார்.
குறித்த சோழர்களால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலின் மூலஸ்தானத்திற்கான கிணறு என்பது ஆய்வு ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டமையால் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நேற்றைய தினம் சம்மந்தப்பட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சருடனான சந்திப்பின் போது குறித்த கிணற்றின் கட்டுமானங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தினால் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் பந்துல ஜீவ, புனர்நிர்மான பொறுப்பதிகாரி ராகினி மற்றும் மேலாய்வு உத்தியோகத்தர் தஷிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.