அடுத்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் சில அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபடும் எனத் தெரியவருகின்றது.
எதிர்வரும் 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதுடன் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.
அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி 2ஆவம் வாசிப்புமீதான விவாதம் ஆரம்பமாகும். 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகும். டிசம்பர் 13 ஆம் திகதி பாதீடு மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
பாதீட்டு விவாதத்தில் அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் தனித்தனியாக விவாதம் நடத்தப்படும்.இதன்போது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள அமைச்சுகளுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் எதிரணி வாக்கெடுப்பைகோரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்சக்தி அமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு உட்பட மேலும் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க முயற்சி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.