உள்நாட்டிலேயே பல இருக்கும்போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான
தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும்
செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு
ஆணைக்குழு அமைப்பதாக காட்டி காலத்தை கடத்துகின்றார் என மட்டக்களப்பு மாவட்ட
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை
இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இன்று
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த
அவர்,
11ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு
கூடியிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு இலங்கை அனுசரணை கொடுத்து இலங்கையில்
நடைபெற்ற அநீதிகளுக்கு பொறுப்பு கூறுவது தொடர்பாக பிரேரணை அங்கு
கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இலங்கை ஐக்கிய நாடுகள்
மனித உரிமை ஆணையகத்தையும், சர்வதேசத்தையும் தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டே
வருகின்றது.
அந்த வகையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித
உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரதி உயரஸ்தானிகர் ஒரு எழுத்து மூலமாக
அறிக்கையை கொடுத்திருக்கின்றார்.
அந்த அறிக்கையில், இலங்கையிலே நம்பிக்கையை
கட்டி எழுப்ப வேண்டும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து
ஒரு நியாயமான விசாரணை வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு
இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக
நடத்தப்பட வேண்டும், வடகிழக்கிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில
அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு
சர்வதேச அங்கீகரிக்க கூடிய சட்ட திட்டத்தை கொண்டு வரும் வரை இடைநிறுத்தி
வைக்க வேண்டும் என்பதற்கு மாறாக இந்தியாவின் வதிவிட பிரதிநிதி இலங்கையில்
தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு இங்கு ஒரு நிரந்தரமான
தீர்வை முன்வைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.
பாராளுமன்றத்தில்
எதிர்வரும் 21ஆம் 22 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு
சம்பந்தமாக விவாதம் வர இருக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகள் அனைத்தும் இந்த
நாட்டில் இருக்கும்போது அதை விடுத்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள்
இருக்கின்றது, உள்ளூர் கடன் மறுசீரமைப்பு திட்டம் இருக்கின்றது,
வெளிநாட்டு கடன் மறு சீரமைப்பு திட்டம் இருக்கின்றது, பல பிரச்சனைகள் இந்த
நாட்டிலே இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் அனைத்துமே உயிர்த்த ஞாயிறு குண்டு
வெடிப்பு சம்பந்தமாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக்
கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
உலகம் சுற்றும் வாலிபனாக ஒவ்வொரு நாடாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றார்.
பிரித்தானியா
செல்கின்றார்,பிரான்ஸ் செல்கின்றார்,ஜப்பான் செல்கின்றார், சிங்கப்பூர்
செல்கின்றார் தற்போது கியூபா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல
இருக்கின்றார.; உண்மையில் உள்நாட்டிலேயே இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது
இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி
தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த
பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதுமாக காலத்தை
கடத்துகின்றார்.
தற்போதைய உயிர்த்த ஞாயிறு பிரச்சனை தொடர்பாக மூன்று
பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இது விடயமாக விசாரித்து அந்த அறிக்கையை
பாராளுமன்றத்திலே சமர்ப்பிப்பதாக இருக்கின்றார். ஆனால் பாராளுமன்றத்திலே
இன்று இருக்கும் பொதுஜன பெரமுன கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுமே உயிர்த்த
ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி நிற்கும் போது
ஜனாதிபதி மாத்திரம் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த குண்டு
வெடிப்பு சம்பந்தமான சேனல் 4 வெளியிட்ட வீடியோ சம்பந்தமாக விசாரித்து ஒரு
அறிக்கையை தயாரிப்பது என்பது இந்த நாட்டு மக்களை மாத்திரம் அல்ல
சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாக தன்னுடைய வழமையான பாணியிலேயே ஏமாற்றும்
செயலாகவே இவர் செய்து கொண்டிருக்கின்றார்.
தென்னிலங்கையில் இருந்து
விமல் வீரவன்ச குழுவினரும் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தமிழ்
மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் குற்றம் சாட்டுவது என்பது
உண்மையிலேயே நகைப்புக்குரிய ஒரு விடயம். விமல் வீரவன்சவை பொருத்தமட்டில்
அவருடைய உடம்பிலே ஓடும் இரத்தம் இன வெறியுடன் சம்பந்தப்பட்ட இரத்தம் என்பது
அனைவருக்கும் தெரியும்.
இந்த இன துவேசத்தை இன வெறியை வைத்துக்
கொண்டுதான் தன்னுடைய அரசியலை அவர் தக்கவைத்துக் கொள்கின்றார். எதிர்வரும்
ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் இந்த நிலையில் அந்த தேர்தலில் கூட தானோ
அல்லது தான் சார்ந்தவர்களோ வெல்ல வேண்டுமாக இருந்தால் இப்படியான இன துவேச
இன வெறி கொண்ட கருத்துக்களை விதைப்பது சர்வசாதாரண விடயம்.
அந்த
வகையில் அவர் இந்த கருத்துக்களை சொல்லியிருப்பது மாத்திரமல்ல வடக்கு
கிழக்கிலே இருக்கும் சில தமிழ் பிரதிநிதிகள் தமிழ் கட்சிகள் கூட இந்த
பிரச்சினையை ஒரு அரசியல் ரீதியாக அணுகப் பார்க்கின்றார்கள். உண்மையில் இந்த
விடயத்தை உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் என்பது 250 க்கு மேற்பட்ட
உயிர்களை காவு கொண்ட ஒரு சம்பவம் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான மக்கள்
காயப்பட்ட ஒரு சம்பவம் அது மாத்திரமல்ல இலங்கையின் நிலைப்பாட்டை வெளி
உலகத்திற்கு உணர்த்திய சம்பவம்.
ஏனென்றால் கிட்டத்தட்ட 40
வெளிநாட்டவர்கள் உயிர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். அந்த வகையிலே இந்த
சம்பவத்தை அரசியலுடனோ, தமிழ் தேசியத்துடனோ, தமிழ் மக்களுடனோ இணைத்து
பார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.
புகையிரத
சாரதிகள் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக இன்று இரண்டு அப்பாவி உயிர்கள்
காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது. அதில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன். இந்த
நாட்டின் பொருளாதார சூழ்நிலை மாத்திரமல்ல நாட்டில் உள்ள நிர்வாக சீர்கேடு
அது மாத்திரமல்லாமல் அமைச்சுகளில் உள்ள ஊழல்கள் சம்பந்தமாக நிர்வாகத்தை
ஒழுங்காக கொண்டு நடத்த முடியாமல் இன்று பலரும் பல விடயங்களை முன்வைத்து
வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என்கின்ற ஒரு பெரிய பிரளயமே நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது இந்த நாட்டில்.
அந்த வகையில் நேற்றைக்கு முதல்
நாள் மதியம் இருந்து புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தத்திலே
ஈடுபட்டிருக்கின்றார்கள.; இதன் காரணமாக புகையிரதத்திலே நெருசல் மாத்திரம்
அல்ல இருப்பதற்கு இடமில்லாமல் புகையிரதத்துக்கு மேல் இருந்து பயணம் செய்த
ஒரு பல்கலைக்கழக மாணவன் தலை துண்டிக்கப்பட்டு இறந்த ஒரு சம்பவம் என்பது
இந்த நாட்டின் ஒரு சோகமான நிர்வாக கேட்டுன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக
இருக்கின்றது.
அந்த வகையில் அரச திணைக்கள ஊழியர்கள் அமைச்சையும்
அமைச்சின் மேலதிகாரிகளையும் குற்றம் சாட்டுவதுடன் அமைச்சர்கள் ஊழியர்களை
குற்றம் சாட்டும் ஒரு நிலை மாறி மாறி குற்றச்சாட்டு அளவுக்கு நிலை
இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இந்த மரணத்திற்கு போக்குவரத்து அமைச்சு
முழு பொறுப்பையும் எடுத்து உரிய விசாரணையை முன்னெடுத்து இந்த உயிர்
இழப்பிற்கு ஒரு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மிகவும்
ஆக்ரோசத்துடன் இந்த அமைச்சை கேட்டுக் கொள்கின்றேன்.
அரசாங்கம்
குற்றம் சாட்டுவது அரசாங்கத்தை மாற்றுவதற்காக எதிரணிகள் எதிர்க்கட்சிகள்
பின்புலத்தில் இருந்து இயக்கிக் கொண்டு இங்கே போராட்டங்கள் நடைபெறுவதாக
அரசாங்கம் குற்றச்சாட்டுகின்றது இதே போன்று தான் 2021 ஆம் ஆண்டுக்கு பின்பு
இந்த பொருளாதார நெருக்கடி வந்ததன் பின்பு அரகல என்னும் போராட்டமும்
நடைபெற்று இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஆனால் பொதுமக்கள் தாங்கள்
பாதிக்கப்படும் போது போராட்டங்களை செய்ய எத்தனிக்கும்போது அரசாங்கம்
எதிர்க்கட்சிகளின் தலைமையில் இதனை திணிப்பது என்பது ஒரு புதிய விடயம் அல்ல.
அந்த
வகையில் மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கடந்த வருடம் அரகலயின் மூலமாக
அறிந்திருக்கின்றது தொடர்ச்சியாக இந்த அடக்குமுறை நீடித்தால் இது ஒரு
பெரியதொரு போராட்டமாக வெடிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.