ஆப்கானிஸ்தானில் பெண்கள் தலைமையில் இயங்கி வந்த வானொலிக்கு அந்நாட்டு ஆட்சியாளர்களான தலிபான்கள் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சென்றதன் பின்னர் அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதில், அந்நாட்டில் பெண்கள் நடத்தி வந்த ஒரே வானொலியான 'சடை பனோவன்' (பெண்களின் குரல்) என்ற வானொலிக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
குறித்த வானொலி 10 ஆண்டுகளாக 8 பணியாளர்களின் தலைமையில் இடம் பெற்று வந்துள்ளதுடன், அதில் 6 பெண்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
இது அந்நாட்டின் ஒரே பெண்கள் நடத்தும் வானொலியாக இருந்ததுடன், இந்த வானொலிக்கு அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்துறை தடை விதித்துள்ளது.
இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத் துறையின் பிராந்திய இயக்குநர் மொயிசுதீன் அகமதி, 'ரமஸான் மாதத்தில் இசை ஒலிபரப்புவதன் மூலம் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கைகளை இந்த வானொலி தொடர்ந்து மீறி வருகின்றமையாலே இந்த வானொலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
அத்துடன் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கையை ஏற்பதுடன், இனி இதுபோன்று நிகழாது என்றும் அந்த வானொலி உறுதி அளிக்கும் பட்சத்தில் தடை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.